Monday, 10 February 2025

நாமக்கல்லில் நிலம் அளவீடு செய்து தனிப்பட்டா வழங்க ரூ.5 ஆயிரம் கையூட்டுப் பெற்ற சர்வேயர், வி.ஏ.ஓ. கைது!

நிலத்தை அளவீடு செய்து தனிபட்டா வழங்குவதற்காக, ரூ. 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய அரசு நில அளவையர் மற்றும் விஏஓ ஆகிய இருவரையும், லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
நாமக்கல் மாவட்டம், எர்ணாபுரத்தைச் சேர்ந்தவர் திருமுருகன். அவரது மாமியார், தனது மனைவிக்கு தானமாக கொடுத்த நிலத்தை அளவீடு செய்து, தனிபட்டா வழங்க, இ-சேவை மையம் மூலமாக விண்ணப்பம் செய்தார்.

இந்த விண்ணப்பம், நாமக்கல் வட்டாட்சியருக்கு ஆன்லைன் மூலம் சென்றுள்ளது. வட்டாட்சியர்  அலுவலகத்தில் இருந்து இந்த நிலம் தொடர்பாக விசாரித்து ஒப்புதல் வழங்க, நில அளவையர்  அசோக்குமார் (வயது 33), அணியார் கிராம நிர்வாக அதிகாரி வேலுசாமி (வயது 56) ஆகியோருக்கு, ஆன்லைனில் விண்ணப்பம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பத்தை பெற்றுக்கொண்ட நில அளவையர் அசோக்குமார், நிலம் அளவீடு செய்ய ரூ. 5 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க மனம் இல்லாத திருமுருகன், இது குறித்து, நாமக்கல் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசாரிடம் புகார் செய்தார்.
அதையடுத்து, காவல்துறையினர் ரசாயன பவுடர் தடவிய ரூ. 5 ஆயிரம் பணத்தை கொடுக்க ஆலோசனை வழங்கினர். இதற்கிடையில், திருமுருகனை தொடர்பு கொண்ட கிராம நிர்வாக அதிகாரி வேலுசாமி, தன்னிடம் ரூ. 5 ஆயிரம் கொடுக்குமாறும், அதை நில அளவையர் அசோக்குமாரிடம் தந்துவிடுவதாகவும் தெரிவித்துள்ளார்.

அதன்படி, திருமுருகன், கிராம நிர்வாக அதிகாரி வேலுசாமியிடம் ரூ. 5 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்துள்ளார். அப்போது மறைந்திருந்த, நாமக்கல் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவின் துணை காவல் கண்காணிப்பாளர் சுபாஷினி மற்றும் போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். அப்போது, அவர் நில அளவையர் அசோக்குமார் சொன்னதால் வாங்கினேன் என போலீசாரிடம், வேலுசாமி தெரிவித்தார்.

இது குறித்து தகவல் கிடைத்ததும், காவல் ஆய்வாளர் ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார், நாமக்கல்லில் நில அளவையர் அசோக்குமாரை கைது செய்தனர். தொடர்ந்து நில அளவையர் அசோக்குமார், வி.ஏ.ஓ., கிராம நிர்வாக அதிகாரி வேலுசாமி ஆகியோரிடம் லஞ்ம ஒழிப்பு போலீசார் தீவிர விசாரணை நடத்துகின்றனர்.

No comments:

Post a Comment

தமிழக தென் மாவட்டங்களில் பல்வேறு அரசு அலுவலகங்களில் அதிரடி காட்டியதில் கணக்கில் காட்டப்படாத பணம் ஆவணங்கள் கைப்பற்று

தமிழ்நாட்டிலுள்ள அரசு அலுவலகங்களில் சமீபகாலமாகவே லஞ்ச லாவண்யங்கள் தலைவிரித்தாடுகின்றன.. அதிகமாக பணம் புழங்கக்கூடிய வருவாய்த்துறை...