நாமக்கல் அடுத்த கொண்டப்பநாயக்கன்பட்டி பஞ்சாயத்து பகுதியில் , அரசுக்கு சொந்தமான கரடு புறம்போக்கில், அனுமதியின்றி கற்களை வெட்டி எடுப்பதாக வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, கடந்த, 19ம் தேதியன்று நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் பார்த்தீபன் தலைமையிலான வருவாய்த்துறையினர், உடனடியாக போலீசாருடன் நேரடியாகவே சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
அதிகாரிகளை பார்த்ததுமே, அங்கு கல்குவாரியில் கற்களை உடைத்துக்கொண்டிருந்த தொழிலாளர்கள், வாகனங்களின் டிரைவர்கள், அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். இதையடுத்து, குவாரியில் நிறுத்தப்பட்டிருந்த பாறைகளை உடைக்கும் ஹிட்டாச்சி இயந்திரம், கம்ப்ரசர் டிராக்டர்கள், லாரிகள், டூவீலர் உள்பட 23 வாகனங்களை வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்தனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக சட்ட விரோதமாக கற்களை வெட்டி எடுத்ததாக சிவக்குமார், சுபாஷ், விசிபி பழனிசாமி, மற்றொரு பழனிசாமி , சந்துருமலை ஆகிய 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்ததுடன், தலைமறைவாகி இருக்கும் அவர்களை நாமக்கல் போலீசார் தனிப்படை அமைத்து வலைவீசி தேடி வருகிறார்கள்.
இதனிடையே, கல்குவாரியில் ஆய்வு செய்வது குறித்து, அரசுக்கு முன்கூட்டியே ஏன் தகவல் தெரிவிக்கவில்லை? என கூறி, கொண்டமநாயக்கன்பட்டி கிராம நிர்வாக அதிகாரி ஜான்பாஸ்கோ, விட்டமநாயக்கன்பட்டி கிராம நிர்வாக அதிகாரி கோகிலா ஆகிய இருவரையும் சஸ்பெண்ட் செய்து நாமக்கல் உட்கோட்ட வருவாய் கோட்டாட்சியர் உத்தரவிட்டார். இதேபோல் கனிமவளத்துறையிலும், உதவி புவியியல் ஆய்வாளர் ஒருவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.
இதைக்கேட்டு மாவட்ட விஏஓக்கள் அத்தனை பேரும் அதிர்ச்சியடைந்தனர்.. கடமையை செய்த விஏஓக்களை சஸ்பெண்ட் செய்தது சரியில்லை, அவர்களது சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்யக்கோரி, நாமக்கல் உட்கோட்ட வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.. இவர்களிடம் ஆர்.டி.ஓ., பார்த்தீபன், பேச்சுவார்த்தை நடத்தினார். மாவட்ட ஆட்சித் தலைவரிடம் தெரிவித்து இதுசம்பந்தமாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி சொன்னார்.
No comments:
Post a Comment