காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி கட்சிப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் கெஜா (வயது 53). பெண் தூய்மைப் பணியாளரான இவர், ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியில் வேலை செய்து வருகிறார்.
இந்த நிலையில், கடந்த 22 ஆம் தேதி ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியில் நடந்து வரும் வளர்ச்சிப் பணிகளை ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியாளர் உள்ளிட்ட அதிகாரிகள் வந்துள்ளனர். இதனால், எரிவாயு தகன மேடை அருகில் பணியாளர்கள் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அங்கிருந்த மனிதக் கழிவை அகற்ற வேண்டும் என கெஜாவிடம், மேற்பார்வையாளர் சேக்கிழார் கூறியுள்ளார். இதற்கு அவர் மறுப்பு தெரிவிக்கவே, கெஜாவை தகாத வார்த்தைகளால் பேசி, திட்டிக் கண்டித்துள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான கெஜா, ஸ்ரீபெரும்புதூர் உதவி காவல் கண்காணிப்பாளரிடம் இது குறித்து புகார் அளித்தார்.
புகாரின் பேரில், போலீசார் எஸ்.சி எஸ்.டி வன்கொடுமை பிரிவு, பணியாளரை ஒருமையில் பேசுதல், உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக உள்ள பேரூராட்சியின் மேற்பார்வையாளரான சேக்கிழாரை போலீசார் தேடி வருகின்றனர். இதனிடையே ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி நிர்வாகம் சேக்கிழாரை பணியிடை நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.
No comments:
Post a Comment