கிறிஸ்துமஸ் பண்டிகை நாளான இன்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சென்னை பெசன்ட் நகரிலுள்ள தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனையில் கலந்து கொண்டார். முழங்காலிட்டு கண் மூடி பிரார்த்தனை செய்தார் அண்ணாமலை.
கிறிஸ்துமஸ் தினத்தையொட்டி தமிழ்நாடு முழுவதும் அனைத்து தேவாலயங்களிலும் இன்று சிறப்பு பிரார்த்தனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சென்னை பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி தேவாலயத்தில் சிறப்புப் பிரார்த்தனையில் பங்கேற்றார்.
தரையில் முழங்காலிட்டு கண்மூடி மற்றவர்களோடு இணைந்து சிறப்பு பிரார்த்தனையில் பங்கேற்றார் அண்ணாமலை. பின்னர் வெளியே வந்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையுடன் அங்கு இருந்த பொதுமக்கள் பலர் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.
அப்போது பேசிய அவர், “இந்த அற்புதமான நன்னாளில் அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.. தேவாலயம் வருவது எனக்கு புதிதல்ல. நான் 7 ஆண்டுகள் கிறிஸ்தவ பள்ளியில்தான் படித்தேன். இன்று ஒரு முக்கியமான நாள். இந்த நாளில் நடைபெறும் இந்த சிறப்பு பிரார்த்தனையில் பங்கேற்க வேண்டும் என இந்த தேவாலயத்தின் திருச்சபை தந்தையர் அழைத்தார். உலக மக்கள், தமிழ் மக்கள், இந்திய மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என இறைவனிடம் ஒன்றரை மணி நேரம் அமைதியாக வேண்டுதல் வைக்க ஒரு வாய்ப்பாக இது கிடைத்தது” எனத் தெரிவித்தார்.
மேலும், தேவாலயத்தில் பிரார்த்தனை மேற்கொண்டது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அண்ணாமலை, “இன்றைய தினம், சென்னை பெசன்ட் நகரில் அமைந்துள்ள, அன்னை வேளாங்கண்ணி பேராலயத்திற்குச் சென்று, கிறிஸ்துமஸ் திருநாள் விழாவில் கலந்து கொண்டது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. பேராலயத்திற்கு வந்திருந்த சகோதர சகோதரிகள் அனைவரும் தங்கள் அன்பான வாழ்த்துக்களால், இந்த நாளை இனிமையாக்கினர். தமிழக மக்கள் அனைவரின் வாழ்விலும், மகிழ்ச்சியும், அமைதியும், அன்பும் நிரம்பியிருக்கவும், சமத்துவமும், சகோதரத்துவமும் இருக்க இறைவனிடம் வேண்டிக் கொண்டேன்” எனத் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment