Sunday, 2 February 2025

கிருஷ்ணகிரி போலீஸ் ஸ்டேஷனில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் எஸ்.பியுடன்.. கள ஆய்வுச் செய்த மாவட்ட கலெக்டர்!

கிருஷ்ணகிரி மாவட்டம், முழுவதும்  தாலுகா வாரியாக உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் பொது மக்கள் அளித்திருக்கும் கோரிக்கை மனுவிற்கு அரசு ஊழியர்கள் செய்யப்பட்டிருக்கும் பணிகள் உரிய நேரத்தில் செய்யப்படுகிறதா என்பதனை மாவட்ட ஆட்சியாளரான கே.எம் சரயு கள ஆய்வுகளை மேற்கொண்டு வந்தார். 

இதனைத் தொடர்ந்து, கிருஷ்ணகிரி தாலுகா காவல் நிலையத்தில், "உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்ட கள ஆய்வில், மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு இ.ஆ.ப., வழக்குகள்ப் பதிவு விபரம் உள்ளிட்ட பல்வேறு பதிவேடுகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெ.தங்கதுரை உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.


கோவை மாநகராட்சியில் 76 வயதாகும் வாட்ச்மேன் பழனிச்சாமிக்கும் ரூ.1 லட்சத்து 5 ஆயிரம் வரி விதிப்பு நோட்டீஸ் அளித்த அதிகாரி சஸ்பெண்ட்

கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட காந்திபுரம், கிராஸ்கட் ரோடு 8-வது வீதியில் ஓட்டு வீட்டில் வசித்து வருபவர் பழனிசாமி. இவர் வாட்ச்மேனாக அந்த பகுதியில் வேலை செய்து வருகிறார். இவர் வீட்டின் முன்பகுதியை மெஸ் நடத்த வாடகைக்கு விட்டுள்ளார். இந்நிலையில் அவரது ஓட்டு வீட்டுக்கு ரூ.1 லட்சத்து ஐம்பதாயிரம் வரி விதிப்பு போடப்பட்டுள்ளது. இதுபற்றி செய்திகள் வெளியான நிலையில், வரி வசூலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். 2 பேருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய நகரமாகவும், தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்தபடியாக மிக அதிவேகமாக வளரும் நகரமாகவும் கோவை இருக்கிறது. கோவை மெட்ரோ பகுதியில் சுமார் 35 லட்சம் முதல் 40 லட்சம் மக்கள் வசிக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. சுயதொழில்களாலும், சிறுகுறு நிறுவனங்களாலும் மிகப்பெரிய தொழில் வளர்ச்சி அடைந்த நகரமாக கோவை திகழ்கிறது. கோவையில் மிகப்பெரிய அளவில் தொழில் நிறுவனங்கள் உள்ளன. தமிழ்நாட்டின் கல்வி நகரம் என்கிற அளவில் ஏராளமான கல்லுரிகள் கோவையில் தான் உள்ளன.

முன்பெல்லாம் கோவைக்குள் தான் நிறுவனங்கள், கம்பெனிகள் எல்லாம் இருக்கும். இப்போது எல்லாமே வீடுகளாக மாறிவிட்டன. கம்பெனிகள் பல அவினாசி நோட்டிற்கும், கணபதியை தாண்டியும் போய்விட்டன. பல நிறுவனங்கள் கோவை மாநகரன் புறநகர் பகுதிகளில் தான் இப்போது உள்ளன. கோவை மாநகரம் முழுக்கமுழுக்க குடியிருப்பு பகுதி என்கிற நிலையில் உள்ளது. அதுமட்டுமின்றி கோவை மாநகரம் மிகப்பெரிய மக்கள் அடர்த்தி மிகுந்த நகரமாகவும் உள்ளது. இதன் காரணமாக கோவை மாநகரம் விரிவடைந்து வருகிறது. வரும் 2026ல் விரிவாக்கத்திற்கு பிறகு சென்னை மாநகராட்சிக்கு நிகரான பரப்பளவில் கோவை மாநகரம் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

கோவை மாநகராட்சி, மாநகராட்சி எல்லைக்குட்டபட்ட பகுதிகளுக்கு வீடு, குடிநீர், கழிவு நீர் உள்ளிட்ட வரிகளை விதித்து வருகிறது. அந்த வகையில் கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 8-வது வீதியில் வசித்து வரும் 76 வயதாகும் பழனிச்சாமிக்கும் வரி விதிக்கப்பட்டுள்ளது. காவலாளியான இவர் அந்த பகுதியில் ஓட்டு வீட்டில் வசித்து வருகிறார். வீட்டின் முன்புற பகுதியை 'மெஸ்' நடத்துவதற்காக வாடகைக்கு விட்டு உள்ளார்.

ஆனால் டிரோன் சர்வே எடுத்த கோவை மாநகராட்சி அலுவலர்கள், வீட்டின் மொத்த பரப்பையும் வணிக பகுதியாக மாற்றி சொத்து வரி மறுசீராய்வு செய்திருக்கிறார்கள். இவர் தனது வீட்டுக்கு இதுவரை வரி ரூ.2,182 செலுத்தி வந்திருக்கிறார். வரி சீராய்வு செய்ததால் இனி 6 மாதத்துக்கு ஒருமுறை ரூ.51 ஆயிரத்து 322 சொத்து வரி, குப்பை வரி ரூ.300, அபராத கட்டணம் ரூ.1,050 சேர்த்து ஒரு ஆண்டுக்கு ரூ.1 லட்சத்து 5 ஆயிரத்து 344 செலுத்த வேண்டும் என கோவை மாநகராட்சியில் இருந்து நோட்டீஸ் வழங்கப்பட்டிருக்கிறது. இதுதொடர்பாக சமூகவலைத்தளங்களில் ஓட்டு வீட்டில் பழனிச்சாமி பரிதாபமாக நின்ற வீடியோ, புகைப்படங்கள் வெளியாகி இருந்தது.

இத்தகவல் கோவை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் இந்த தவறுக்கு காரணமான வரி வசூலரை பணியிடை நீக்கம் செய்யவும், மண்டல உதவி வருவாய் அலுவலருக்கு மெமோ கொடுக்கவும் உத்தரவிட்டார். இந்த சம்பவம் தொடர்பாக மாநகராட்சி துணை ஆணையாளர் குமரேசன் விசாரணை நடத்தி, அறிக்கை சமர்ப்பிக்கவும் அறிவுறுத்தினார் அதன்படி துணை ஆணையாளர் விசாரணை நடத்தினார். டிரோன் மூலம் ஆய்வு செய்து வரி சீராய்வு செய்தபோது பணியாற்றிய வரி வசூலர் ஜெய்கிருஷ்ணன் தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தற்போதைய வரி வசூலர் ஆனந்த் பாபு, உதவி வருவாய் அலுவலர் கிருபாகரன் ஆகியோருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வினியோகம் செய்யப்பட்டுள்ளதாக கோவை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

மதுரை மாநகராட்சி ஆணையாளர் கிருஷ்ணகிரி கலெக்டராக பிரமோஷன்!.. 71வது புதிய ஆணையாளராக சித்ரா விஜயன், ஐஏஎஸ்., நியமனம்..!!

மதுரை மாநகராட்சியில் 4 லட்சத்து 12 ஆயிரம் கட்டிடங்களுக்கு சொத்துவரி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, மதுரை மாநகராட்சியில் சொத்து வரி செலுத்த கோரி முதல்முறையாக 4 லட்சத்து 12 ஆயிரம் கட்டிடங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் நோட்டீஸ் அனுப்புவது மதுரை மாநகராட்சி வரலாற்றிலேயே இதுவே முதல் முறை என்கிறார்கள்.

1971ல் மதுரை நகராட்சி மாநகராட்சியான பிறகு முதல் பெண் ஆணையாளராகவும், 71வது கமிஷனராகவும் சித்ரா விஜயன், ஐஏஎஸ்., பொறுப்பேற்க உள்ளது, மதுரைக்கே மிகப்பெரிய பெருமையை தந்து வருகிறது.

மதுரை மாநகராட்சியில் 2024 பிப்ரவரி 2ம் தேதி பொறுப்பேற்றிருந்த ஆணையாளர் தினேஷ்குமார், ஐஏஎஸ்., தற்போது கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியாளராக தமிழ்நாடு அரசால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவருக்கு பதிலாக சித்ரா விஜயன்,ஐஏஎஸ்., மதுரை மாநகராட்சி ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ளார். யார் இவர்?

மதுரையைப் பொறுத்தவரை தமிழ்நாட்டின் பழமையான பெரிய நகரங்களில் ஒன்றாகும். தமிழ்நாட்டின் தலைநகரான சென்னைக்கு அடுத்தபடியாக அதிகப்படியான மக்கள் வாழும் நகரம் மதுரை மாவட்டமாகும்.. மதுரை மாநகராட்சியில் 100 வார்டுகள் உள்ளன..

ஆனால், கடந்த சில வருடங்களாகவே, மதுரை மாநகராட்சியில் ஆணையாளர்கள் அடிக்கடி மாற்றப்படுவதாக ஒரு பேச்சு எழுந்தது.. இதற்கு காரணம், மேயர், அமைச்சர், ஆளுங்கட்சி மாவட்ட பொறுப்பாளர் என 3 பேர், மாநகராட்சி நிர்வாகத்தில் தலையிடுகிறார்களாம்.

மதுரை மாநகராட்சி ஆணையாளரால் சுதந்திரமாகச் செயல்பட முடியவில்லை என்றும், அரசியல் நெருக்கடிகளை சமாளித்து நிர்வாக ரீதியான பணிகளை கையில் எடுப்பதற்குள் மாநகராட்சி ஆணையாளரையே மாற்றி விடுவதாகவும், நிறைய விமர்சனங்கள் எழுந்தன. எனினும், அவையெல்லாம் முறியடிக்கப்பட்டு, பல்வேறு பணிகளும் செயல்படுத்தப்பட்டன..

அத்துடன், நேரடி ஆய்வுகளை மேற்கொண்டு, சாக்கடைப் பிரச்சனைகள், குடிநீரில் கழிவு நீர் கலப்பது உள்ளிட்ட பிரச்சனைகள் தீர்க்கப்பட்டும் வருகின்றன.

குறிப்பாக, மதுரை மாநகராட்சியில் 2024 பிப்ரவரி2ம் தேதி பொறுப்பேற்றிருந்த ஆணையாளர் தினேஷ்குமார், ஐஏஎஸ்., மாநகர நகர் பகுதியில் குப்பையை அகற்றும் நடவடிக்கையை தீவிரப்படுத்தினார். ரோடுகளில் சுற்றித்திரியும் மாடுகள் தொல்லையை கட்டுப்படுத்தினார். பல நிறுவனங்களிடமிருந்து பல லட்சம் வரி நிலுவையை கறார் காட்டி வசூலித்தார். மாநகராட்சி பணியாளர்கள், அதிகாரிகள், கவுன்சிலர்கள் என அனைத்து தரப்பினரின் கோரிக்கைகளை நிறைவேற்றி பாராட்டுக்களை பெற்றார்.

இந்நிலையில், இப்போது தினேஷ்குமார், ஐஏஎஸ்., ஐஏஎஸ் அதிகாரியான இவர் தற்போது கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியாளராக தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக, சித்ரா விஜயன், ஐஏஎஸ்., மதுரை மாநகராட்சியின் 71 வது ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு அரசன் மின்ஆளுமைத்துறை இணை இயக்குனரான சித்ரா விஜயன், ஐஏஎஸ்., புதிய பொறுப்பை ஏற்றுள்ளார். இவர்  கேரளா மாநிலத்தைச் சேர்ந்த ஆவார். 2019 பேட்ச் ஐஏஎஸ்., அதிகாரியான இவர் திருச்சி, தர்மபுரி உட்கோட்டத்தில் சார் ஆட்சியராக பணியாற்றியவர். அத்துடன், தமிழ்நாடு ஊரக மேம்பாட்டு மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை இயக்குநராகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை பெருநகர மாநகராட்சியில லஞ்சம் திளைத்த அதிகாரிகளை களையெடுப்பு!

சென்னை பெருநகர மாநகராட்சியில், கட்டட வரைபட அனுமதியில் விதிமீறல், 'சீல்' வைக்கப்பட்ட கட்டடங்கள் திறப்பு, மாமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து ஊழல், லஞ்ச லாவண்யங்கள் திளைத்த  அதிகாரிகளைக் களையெடுக்கும் பணியில் மாநகராட்சி ஈடுபட்டு வருகிறது. ஓரிரு மாதங்களில், மட்டும் 100க்கும் மேற்பட்டோர் மூன்றாம் நிலை நகரங்களுக்கு மாற்றப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை பெருநகர மாநகராட்சி, தனித்த சட்டத்தின்படி இயங்கி வந்தது. இதனால், தமிழ்நாடு நகராட்சி சீர்த்திருத்தம் மற்றும் நிர்வாகத் துறையின் உத்தரவுகள், சென்னை மாநகராட்சிக்கு பொருந்தாத நிலை நீடித்து வந்தது.

சென்னை பெருநகர மாநகராட்சியின் உயர்ப் பதவியில் இருக்கும் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை தவிர்த்து, மற்ற பொறுப்புகளில் வகிப்போர், தவறு செய்தாலும், சென்னை மாநகராட்சிக்கு உள்ளேயே இடமாற்றம் செய்யப்பட்டு வந்தனர்.

இந்நிலையில், 2023ல் நகர்ப்புற உள்ளாட்சி விதி, திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, நகராட்சி நிர்வாகத்தின் கீழ், சென்னை மாநகராட்சியும் கொண்டு வரப்பட்டது.

மேலும், சென்னை மாநகராட்சியில் பணியாற்றும் அதிகாரிகள், மற்ற மாநகராட்சிகள், நகராட்சிகளில் இடமாற்றம் செய்யப்படலாம் என்ற விதியும், அமலுக்கு வந்தது.

இந்த திருத்தத்திற்கு பின், சுகாதார அதிகாரிகள் சிலர், தமிழ்நாட்டிலுள்ள தங்களின் சொந்த  மாவட்டங்களுக்கு இடமாறுதல் பெற்றனர். அதேநேரம், பெரும்பாலான சுகாதார அதிகாரிகள் இடமாறுதலுக்காக காத்திருக்கின்றனர்.

இதற்கிடையே, கட்டட வரைபட விதிமீறல், ஒப்பந்ததாரரிடம் லஞ்சக் கையூட்டு, 'சீல்' வைக்கப்பட்ட கட்டடங்களை பின்புறத்தில் திறந்து விடுதல் உள்ளிட்ட விதிமீறலுக்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் குறித்த பட்டியலை, மாநகராட்சி சேகரித்துள்ளது.

அதில், லஞ்சக் கையூட்டுப் பெற்றது குற்றம் உறுதி செய்யப்பட்ட 11 உதவி பொறியாளர்கள் முதற்கட்டமாக, மூன்றாம் நிலை நகராட்சிகளில் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கையாக, கட்டாய பணியிட மாறுதல் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடுவதாகும்.

இதேபோல், பல்வேறு நிலைகளிலுள்ள 100க்கும் மேற்பட்ட அதிகாரிகள் முதல், பணியாளர்கள் வரையிலானோர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க, புகாரின் உண்மை தன்மை விசாரிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

அதுமட்டுமின்றி சென்னை பெருநகர மாநகராட்சியில் பெரும்பாலான அதிகாரிகள், 20 ஆண்டுகளுக்கு மேல், சென்னையில் அருகருகே வார்டுகளிலேயே பணியாற்றி வருகின்றனர்.

இதனால், உள்ளூர் அரசியல்வாதிகளுடன் நல்ல தொடர்பிலிருந்துக் கொண்டு, பல்வேறு முறைகேடிலும், லஞ்சலாவண்யம் கையூட்டுப்  பெற்று வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.

குறிப்பாக, விதிமீற கட்டப்படும் கட்டடங்களுக்கு பணம் பெறுதல், 'சீல்' வைக்கப்பட்ட கட்டடத்தை பயன்படுத்த, பின்பக்க கதவை திறந்து கொள்ள லஞ்சக் கையூட்டுப் பெறுதல், ஒப்பந்தாரர்களிடம் லஞ்சம் பெறுதல் உள்ளிட்ட முறைகேடில் தங்களை ஈடுபடுத்திக் கொள்கிறார்களாம்.

மேலும், சுகாதார அலுவலர்கள் சிலரும் பிறப்பு, இறப்பு சான்றிதழ் அளிக்கவும், மயான பூமிகளில் ஒப்பந்ததாரருடன் இணைந்தும் லஞ்சம் பெறுகின்ற குற்றச்சாட்டு விழுந்துள்ளது.

இவர்கள் குறித்து பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில், உண்மை தன்மை ஆராயப்பட்டு வருகிறது.

இதில், குற்றம் உறுதி செய்யப்படுவோர் உடனடியாக, மூன்றாம் நிலை நகரங்களுக்கு, ஒழுங்கு நடவடிக்கையாக மாற்றப்படுவர். மற்ற மாநகராட்சிகளில் பணியாற்றுவோர், சென்னைக்கு பணியமர்த்தப்படுவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதிலும் ஐலட் என்னவென்றால் ஆளும் கட்சிக்கு பிடிக்காத அதிகாரிகள் பணியிட மாற்றம்..?

பணி இடமாற்றம் குறித்து, மாநகராட்சி பொறியாளர்கள் கூறியதாவது:

ஒருவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றால், அவரிடம் விளக்கம் பெற்றிருக்க வேண்டும். அதுபோன்று எதுவும் மேற்கொள்ளாமல், அடுத்தாண்டு ஓய்வு பெறுவோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில், ஒழுங்கு நடவடிக்கை என்ற பெயரில், ஆளுங்கட்சி கவுன்சிலர்கள், அரசியல்வாதிகளுக்கு ஒத்துழைப்பு தராத அதிகாரிகளை மாற்றி வருகின்றனர். ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டு, எவ்வளவு லஞ்சம் பெற்றாலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை. அனைத்து மட்டத்திலும், சென்னையில் ஊழல், லஞ்ச லாவண்யம் நடந்து வருகிறது.

Saturday, 1 February 2025

திமுக பெண் தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம்.. மாவட்ட கலெக்டர் ஷஜீவனாவிடம் மனு அளித்தனர். உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்துள்ளார்.

தேனி மாவட்டம், சமீபத்தில் கெங்குவார்பட்டி பேரூராட்சி மன்ற மாதாந்திர கூட்டம் நடைபெறுவதாக இருந்தது. இதில் மன்ற கூட்டத்தை புறக்கணித்து  கெங்குவார்பட்டி பேரூராட்சி  தலைவராக உள்ள தமிழ்ச்செல்வி மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டு தீர்மானக் நகலை  செயல் அலுவலரிடம் ஒப்படைத்து வெளிநடப்பு செய்துள்ளனர்.

தேனி மாவட்டம், கெங்குவார்பட்டி பேரூராட்சி தலைவர் தமிழ்ச்செல்விக்கு எதிராக, துணைத் தலைவர் ஞானமணி தலைமையில் கவுன்சிலர்கள் போர்க்கொடி துாக்கி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர மாவட்ட ஆட்சியாளர் ஷஜீவனாவிடம் மனு அளித்துள்ளனர்.

கெங்குவார்பட்டி பேரூராட்சி தலைவர் பதவி ஆதிதிராவிடருக்கு ஒதுக்கப்பட்டது. இங்கு 2022ல் நடந்த உள்ளாட்சி தேர்தலில் மொத்தமுள்ள 15 வார்டுகளில் தி.மு.க.,- 11, அ.தி.மு.க.,- 3, ம.தி.மு.க.,-1 வெற்றி பெற்றனர்.

இதில் 6வது வார்டு கவுன்சிலர் தமிழ்ச்செல்வி (தி.மு.க.,), தலைவராகவும், 10வது வார்டு கவுன்சிலர் ஞானமணி( தி.மு.க.,) துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆரம்பத்தில் தலைவர், துணைத்தலைவர் இடையே சுமூக உறவு இருந்தது. அதன்பின் பேரூராட்சி மன்றக்கூட்டம் முறையாக நடத்தாதது, வார்டுகள் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் திட்டத்திற்கு டெண்டர் விடுவது, கான்ட்ராக்டரைச் தேர்வு செய்வது உட்பட பல விஷயங்களில் தலைவர், துணைத்தலைவர் இடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

பெரும்பாலான தி.மு.க., கவுன்சிலர்கள் துணைத்தலைவருக்கு சாதகமாக இருந்தனர். தலைவர், துணைத்தலைவர் இடையே சுமூகமான உறவு இல்லாததால் பேரூராட்சி நிர்வாகத்தில் தொடர்ந்து சிக்கல் நிலவுகிறது. இதனால் கடந்த 34 மாதங்களில் கெங்குவார்பட்டி பேரூராட்சியின் 7 செயல் அலுவலர்கள்  மாறியுள்ளனர்.

இந்நிலையில் கடந்த ஜனவரி 29-01.2025 அன்று துணைத் தலைவர் ஞானமணி தலைமையில் கவுன்சிலர்கள் 7 பேர், மாவட்ட ஆட்சியாளரிடம், பேரூராட்சி தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர மனு அளித்துள்ளனர். இரு தரப்பினரையும் சமாதானப்படுத்த கெங்குவார்பட்டி பேரூராட்சியில் தேனி மக்களவைத் தொகுதி உறுப்பினர் தங்கத்தமிழ்செல்வன், சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சரவணக்குமார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் சுமூக முடிவு எட்டப்படவில்லை.

அதுமட்டுமின்றி இதே பேரூராட்சியில் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் பேரூராட்சியில் தூய்மைப் பணியாளராக பணிபுரிந்து வரும் நபர் ஒருவரை சாதி ரீதியாக இழிவுபடுத்தி பேசிய செயல் அலுவலர் வீடியோ குறித்து சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

கெங்குவார்பட்டி பேரூராட்சி பெண் செயல் அலுவலர் அங்கு பணிபுரியும் ஆண் தூய்மைப் பணியாளரை தரக்குறைவாகப் பேசும் காணொளி வெளியாகியுள்ளது. பேரூராட்சி தூய்மைப் பணியாளர்களைத் தனது அலுவலக பணிக்குப் பயன்படுத்தியது குறித்து கேள்வி எழுப்பியதால் பெண் செயல் அலுவலர் வசைபாடித் திட்டியதாக தெரிகிறது.

இது தொடர்பாக அப்பது பேரூராட்சி பெண் செயல் அலுவலர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.

“உனக்கு என்ன வேலை சொல்லியிருக்கறனோ அதை மட்டும் தான் நீ செய்யனும். ஒருத்தன் பன்றி மேய்த்தால் நீ பன்றி மேப்பியா…” என்று அந்த செயல் அலுவலர், தூய்மைப் பணியாளரை தரக்குறைவாகச் சாதிய ரீதியாகத் தாக்கிப் பேசுவது காணொளியில் பதிவாகியுள்ளது. தனக்கு அலுவலக பணிகள் தரப்படுவதை எதிர்த்து “நான் ஸ்வீப்பர் தான்” என்று தூய்மைப்பணியாளர் கேள்வி கேட்பதும் அதில் பதிவாகியுள்ளது.

தமிழ்நாட்டிலுள்ள பல பேரூராட்சிகளில் இது போன்று தூய்மைப் பணியாளர்கள் சொல்லொன்னா துயரங்களை தினமும் அனுபவித்து வருகின்றனர். குறிப்பாக சாதி ரீதியாக அவர்களைத் தாக்குவதும் அணுகுவதும் நடைமுறையாகவே உள்ளது.


தவெக மாவட்ட செயலாளருக்கு வாழ்த்து தெரிவித்த வழக்குரைஞர்கள்!

வேலூர் மாவட்டம், தமிழக வெற்றி கழக நிறுவனத் தலைவர் தளபதி விஜய்யால், வேலூர்  மேற்கு மாவட்ட செயலாளராக ஆர். வேல்முருகனை கழக பணியாற்றிட நியமனம் செய்துள்ளார். இதன் பேரில் மாவட்ட செயலாளரை நேரில் சந்தித்து வாழ்த்துக்கள் தெரிவித்தனர்  குடியாத்தம் தொகுதி பொறுப்பாளர் இளங்கோ, ஆர். ரமேஷ் , வழக்குரைஞர்கள் எ.ஆனந்தன், ஜி. சாமு (எ) புஷ்பராஜ், எ. தென்காந்தி,
ஜி. தமிழ் எம்சி ஆகியோர்.   வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்ந்தவர்களை கெளரவித்தார் வேல்முருகன்.

வள்ளிமலை கோயில் அடிவாரத்தில் மாமிசம் தயாரிப்பதை தடை செய்யக் கோரி இந்து முன்னணி மனு!

வேலூர் மாவட்டம், காட்பாடி ஒன்றியம், இந்து முன்னணி சார்பில், வள்ளிமலை ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அடிவாரத்தில் மாமிசம் தயாரிப்பது உண்பது தடை செய்ய வேண்டும் என்று இந்து சமய அறநிலையத் துறையிடம் மனு அளிக்கப்பட்டது. ரே. வெங்கடேசன், இந்து முன்னணி மாவட்ட செயலாளர், நா. பார்த்திபன், மாவட்ட செயற்குழு உறுப்பினர், கே. நாகராஜ், ஒன்றிய செயலாளர், ரா. பாபு, ஒன்றிய செயலாளர் இ .நேதாஜி, ஒன்றிய செயற்குழு உறுப்பினர் ஆகியோர் இந்த மனு அளிக்கும் நிகழ்வில் கலந்துக் கொண்டனர். இந்த கோரிக்கை மனுவை கோயில் நிர்வாகச் செயல் அலுவலர் திருநாவுக்கரசு பெற்றுக் கொண்டார்.

கிருஷ்ணகிரி போலீஸ் ஸ்டேஷனில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் எஸ்.பியுடன்.. கள ஆய்வுச் செய்த மாவட்ட கலெக்டர்!

கிருஷ்ணகிரி மாவட்டம், முழுவதும்  தாலுகா வாரியாக உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் பொது மக்கள் அளித்திருக்கும் கோரிக்கை...